Tuesday, June 17, 2014

வாண்டுமாமா - சிறுவர் இலக்கியத்தின் தந்தை




 
தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தின் தந்தை வாண்டுமாமா காலமானார்.

குழந்தைகளுக்காக மாய மோதிரம், மந்திரக் கம்பளம் ,குள்ளன் ஜக்கு போன்ற பல அற்புதக் கதைகளைப் படைத்தவர் வாண்டுமாமா அவர்கள்.
 
வாண்டுமாமா பெரியவர்களுக்கும் கௌசிகன் என்ற பெயரில் சந்திரனே சாட்சி, அழகி போன்ற சமூக நாவல்களை எழுதியிருக்கிறார். சந்திரனே சாட்சி சித்திரத் தொடராகவும் வெளி வந்தது. பாமினிப் பாவை , ஜூலேகா ,புலிக் குகை போன்ற சரித்திர நாவல்களையும் எழுதியுள்ளார்.

சூரியக் குடும்பம் ,விண்வெளி வாழ்க்கை போன்ற பல அறிவியல் நூல்களை எழுதியுள்ளார். பாகவதம் என்ற புராணக் கதையையும் எழுதியுள்ளார்.








இவர் எழுதிய சுழிக் காற்று அனைவரும் தவறாமல் படித்து ரசிக்க வேண்டிய மர்ம நாவல் [என் All time favoriteகளில் ஒன்று]. இவரது சுவாரசியமான வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள இவர் சுய சரிதையான எதிர் நீச்சலைப் படியுங்கள்.











வெளி நாட்டுக் காமிக்ஸைத் தமிழரிடம் பிரபலம் ஆக்கியது முத்துக் காமிக்ஸ் என்றால் தரமான சித்திரக் கதைகளைத் தமிழிலேயே உருவாக்கிச் சிறுவர்கள் மட்டுமில்லாமல் பெரியவர்களையும் கவர்ந்தது வாண்டுமாமா அவர்களே ! சிலையைத் தேடி, மூன்று மந்திரவாதிகள், ஆசைகள் மடிவதில்லை ,வீர விஜயன் போன்ற அற்புதச் சித்திரக் கதைகளை மறக்க முடியுமா?

இப்போதும் அவர் முன்பு எழுதிய கதைகளான பலே பாலு தினமலர் சிறுவர் மலரிலும், மர்ம மாளிகையில் பலே பாலு ஹிந்து நாளிதழிலும் தொடர்களாக வந்து கொண்டிருக் கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.






 

'இவரது இடத்தை வேறு யாராலும் நிரப்ப இயலாது ' என்ற வார்த்தைகளை நாம் பலருக்கும் உபயோகித்திருக்கின்றோம் . எனினும் இவை வாண்டுமாமாவுக்கு நூறு சதவீதம் பொருத்தமானவை. சிறுவர் இலக்கியத்தில் வாண்டுமாமாவுக்கு அடுத்தபடியாக ஒருவரைக் குறிப்பிட வேண்டுமென்றால் ,தீவிரமாக யோசித்தாலும் விடை கிட்டுமா என்பது சந்தேகமே !